புதன், 1 ஜூலை, 2020

மண்ணுலகில் மானுடர்தம்
     இன்னுயிரை காத்திருக்கும்
             மருத்துவக் கடவுள் வாழ்க!

தன்னுயிரை தானீந்து
       தரணியெல்லாம் காத்திடுவோர்
                தாயுள்ளம் கொண்டோர் வாழ்க!

விண்ணுலகம் சென்றவரை
       வீட்டுக்கு கூட்டிவரும்
              வித்தைகள் அறிந்தோர் வாழ்க!

செந்நீர் சிந்துவோரை
         செவிலியர்த்தம் துணையோடு
                  செப்பனிடுவோர் சுற்றம் வாழ்க!

கண்ணீரில் கதறிடுவோர்
       கைப்பிடித்து காப்பாற்றும்
               கருணையுள்ளம் கொண்டோர்  வாழ்க!

தொன்னூறு தொட்டவரும்
         தொழுதல் மறுப்பவரும்
                  தொழுதிடும் தெய்வம் வாழ்க!

உன்னுயிரில் தானிருந்து
        உறுதுணையாய் உண்மையுமாய்
                உயிர்காப்போர் உற்றார் வாழ்க!

பெண்ணுள்ளம் தான்கொண்டு
        பெருநோய் நிலையறிந்து
                பிணிதுடைப்போர் பெற்றோர் வாழ்க!

அண்மைக்கால அருநோய்க்கு
         அகற்ற மருந்தின்றும்
                 அயராது உழைப்போர் வாழ்க!

ஊண்கண்ட பெருநோயை
        உயிர்தந்து காத்திருக்கும்
                 உத்தமர்தம் மக்கள் வாழ்க!

கண்டயிடம் கொரனாவால்
       கதறியலும் மக்களுயிர்
              காத்திடுவோர் கனவு வாழ்க!

அண்டமெல்லாம் நடுநடுங்கி
         அச்சமுற்று மருகிநிற்க
                   அருமருந்தாய் அமைந்தோர் வாழ்க!

சண்டையிடும் சண்டியரும்
          மண்ணாலும் மன்னவரும்
                  சரணடையும் சான்றோர் வாழ்க!

சொன்னசொல் மருந்தாக
          சுறுசுறுப்புத்  தெம்பாக
                  சுழன்றிடுவோர் சுற்றம் வாழ்க!

கொண்டபணி  கொள்கையாக
          கொரானாவை கொன்றுவரும்
                    கோமகனார் குலந்தான்  வாழ்க!

என்றென்றும் இவர்களுயிர்
         எமனெடுக்கத் தடைபோட்டு
                  எதிர்த்திடுவோர் குலமும் வாழ்க!வாழ்கவே !

மணிவேல்
01.07.2020
மருத்துவர் தினம்








 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக